அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: தாயாருக்கு உணவு கொண்டு சென்ற 14 வயது சிறுவன் பலி

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தின்போது, விடுதி அருகே இருந்த ஒரு கடையில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது மேலும் கவலையளித்துள்ளது.

ஆகாஷ் பாத்னி என்ற சிறுவன், பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி அருகே டீக்கடையில் இருக்கும் தனது தாயாருக்கு உணவு கொண்டு சென்றபோதுதான், விமான விபத்து ஏற்பட்டது.

தாயாரிடம் உணவை அளித்துவிட்டு, கடையினுள் ஆகாஷ் உறங்கிக் கொண்டிருந்தபோது, கடையின் பின்புறத்தில் விமானம் விழுந்து வெடித்தது.

இந்த விபத்தின்போது, டீக்கடையிலும் தீப்பற்றி எரிந்தது. அந்த சமயத்தில், ஆகாஷ் உறங்கிக் கொண்டிருந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இருப்பினும், அவரது தாயார் சீதாபென் தீக்காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். பலத்த தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட சீதாபென், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்தவர்கள், விமானம் மோதிய மாணவர் விடுதியில் இருந்தவர்கள், அப்பகுதியில் இருந்தவர்கள் என 274 பேர் பலியாகினர்.

பலியான ஒவ்வொருவரின் தனிப்பட்ட கதைகளும் நெஞ்சைக் கலங்கடிப்பதாக மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு வருத்தம் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.