தொகுதிக் கிளை, மாவட்டக் கிளை என்ற பெயரில் தமிழரசில் கட்சியின் முடிவை மீறினால் கடும் நடவடிக்கை!

“உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை ஏற்படுத்துவது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு எடுத்த முடிவுகளையே கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் நடைமுறைப்படுத்துகின்றார்கள். அவற்றுக்கு மாறாக – முரணாக – கட்சியின் மாவட்டக் கிளை, தொகுதிக் கிளை என்ற பெயரில் உறுப்பினர்கள் செயற்பட்டால் அல்லது நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை உடனடியாகப் பாயும்.”

இவ்வாறு எச்சரித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

அவர் இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு:-

“உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இரண்டு தடவைகள் கூடி, விரிவாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்து இருக்கின்றது. அந்தத் தீர்மானங்களே கட்சியின் முடிவுகள். அவற்றையே கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் உறுப்பினர்களுக்கு அறிவித்து முன்னெடுக்கின்றனர். அவற்றையே கட்சியின் முடிவாகக் கருதி முனெடுக்க வேண்டியது கட்சி உறுப்பினர்களின் கடமையாகும்.

தொகுதிக் கிளைகள், மாவட்டக் கிளைகளின் தீர்மானங்கள் என்ற பெயரில் கட்சியின் முடிவுக்கு மாறாக ஏதேனும் செயற்பாடுகளை, நடவடிக்கைகளை உறுப்பினர்கள் முன்னெடுத்தால், அவர்களுக்கு எதிராக உடனடிக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.