மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது: பயணிகள் வெளியேற்றம்!

அமெரிக்காவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை, ​ அமெரிக்காவின் ​சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த விமானம் கொல்கத்தாவில் அதிகாலை 12.45 க்கு தரையிறக்கப்பட்டது. பின்னர், 2 மணியளவில் மும்பைக்குச் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது.

போயிங் 777-200எல்ஆர் ரக விமானமான ஏஐ180, இடது என்ஜினில் ஒரு தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனால், பயணம் தாமதமானது. மேலும், தொழில்நுட்பக் கோளாறுகளை சரிசெய்வதற்காக அதிகாலை 5.20 மணியளவில், அனைத்து பயணிகளையும் இறங்குமாறு விமானத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12 ஆம் தேதி லண்டன் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி, விமான ஊழியர்கள், பயணிகள், பொதுமக்கள் உள்பட 272-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர்.

இது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நேற்றிரவு(ஜூன் 16) தில்லியிலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதும் பல்வேறு கவலைகளை அதிகரித்திருக்கிறது.

தொடர்ச்சியாக போயிங் விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதாலும், அகமதாபாத் விமான விபத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், அனைத்து போயிங் விமானங்களிலும் கூடுதல் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.