மன்னாரில் இன்று அதிகாலை வேளை தந்தை செல்வாவின் சிலை உடைப்பு! – சந்தேகத்தில் ஒருவர் கைது.
மன்னார் நகர மத்தியில் மாவட்ட செயலகத்துக்கு முன் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் சிலை இன்று புதன்கிழமை அதிகாலை ஒரு கும்பலால் உடைக்கப்பட்டுள்ளது.
தந்தை செல்வாவின் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை முக்கியஸ்தர்கள் இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தந்தை செல்வாவின் உருவச் சிலையில் காணப்பட்ட அவரது தலை முழுமையாக அகற்றப்பட்ட நிலையில் அவரது சிலைக்கு அருகில் இருந்து தலைப்பாகம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அறிந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் ஆகியோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
















