‘அணையா விளக்கு’ போராட்டக் களத்தில் அமைச்சர் சந்திரசேகர், ரஜீவன் எம்.பி. மக்களின் எதிர்ப்பால் வெளியேறினர்.
யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரிய ‘அணையா விளக்கு’ போராட்டக் களத்துக்கு இன்று சென்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அஞ்சலி செலுத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து வெளியேறினார்.
பல்வேறு சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்புகளும் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் உட்படப் பலர் ‘அணையா விளக்கு’ போராட்டக் களத்துக்குச் சென்று அமைச்சர் சந்திரசேகருடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது அமைச்சர் உள்ளிட்டவர்களை வெளியேறுமாறு ஆர்ப்பாட்க்கார்கள் கூச்சலிட்டனர். இதனால் குழப்பகரமான நிலை இடம்பெற்றது. அமைச்சர் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்பட்ட நிலையில் அமைச்சரின் வாகனங்களுக்குக் கல்வீச்சு, தண்ணீர்ப் போத்தல் வீச்சு என்பனவும் இடம்பெற்றன.




