நொய்டா பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: கரும்புகையால் மக்கள் அவதி, பெரும் பொருள் சேதம்!

நொய்டாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 2-ல் உள்ள தனியார் பெயிண்ட் தயாரிக்கும் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை காலை நேரிட்ட தீ விபத்தில் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்தில் கட்டடத்தில் இருந்து தீ உயரே எழும்பியது. மேலும், அங்கிருந்து வெளியான கரும்புகையால் அந்தப் பகுதி மக்கள் மூச்சுத் திணறலால் பாதிப்படைந்தன.

இதுகுறித்து தீயணைப்பு தலைமை அதிகாரி கூறுகையில், “காலை 5.30 மணியளவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தீயின் தீவிரம் அதிகமானதால், கூடுதல் வாகனங்கள் அனுப்பப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன” என்றார்.

அருகில் உள்ள மாவட்டங்களான ஹபூர், புலந்த்ஷஹர், காஜியாபாத் மற்றும் மீரட் ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்புக் குழுக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. மொத்தம் 25 தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீயில் யாருக்கும் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், அதிகளவிலான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. அதன் மதிப்பீடுகள் குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வார தொடக்கத்தில், ரோஹினியின் ரிதாலா பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். நொய்டா பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகள் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.