வடக்கு அபிவிருத்தித் திட்டம்: இணைப்புக் குழு முன்மொழிவு.

உலக வங்கியால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளின் தொடர் நடவடிக்கைக்காக இணைப்புக் குழுவொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

உலக வங்கியின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகர், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கின் 5 மாவட்டங்களினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆளுநர் தனது வரவேற்புரையில், ஜனாதிபதியின் வழிகாட்டலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டங்களை முன்னெடுப்பதற்காக வந்துள்ள உலக வங்கிக் குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், எமது மாகாணத்தைக் கட்டியெழுப்ப உலக வங்கி கரம் கொடுத்து உதவ வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க உரையாற்றும்போது அரசின் சார்பில் உலக வங்கியின் முயற்சிக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

உலக வங்கியால் வடக்கு மாகாணத்திற்கு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட பயணம் மற்றும் அதிகாரிகள், மக்கள் சமூகங்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 8 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் 7 வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 வலயங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 வலயங்களும் வடக்கின் ஏனைய 3 மாவட்டங்களில் தலா ஒரு வலயங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை இணைக்கும் கொக்கிளாய் பாலமும் முன்மொழிவாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியால் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத்துறை, தொழில்நுட்பம் ஆகிய 4 விடயப் பரப்புக்களின் கீழ் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்பதுடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதல் கட்ட செயற்படுத்தலுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஒவ்வொரு மாவட்டங்களினதும் மாவட்ட செயலர்கள் தங்களது மேலதிக தேவைப்படுத்தல்களையும் முன்வைத்தனர். எதிர்காலத்தில் உலக வங்கியால் அவற்றைக் கவனத்தில் எடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

உலக வங்கியின் செயற்றிட்டத்தைத் தொய்வின்றி விரைவாக செயற்படுத்துவதற்காக இணைப்புக் குழுவொன்றும் முன்மொழியப்பட்டது. அந்தக் குழு அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பது என்று நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.