குஜராத்தில் ஒரே பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிப்பு!

குஜராத் மாநிலத்திலுள்ள பள்ளியில் படிக்கும், 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கண்களைத் தாக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தெஹ்காம் தாலுகாவைச் சேர்ந்த ஜான்க் கிராமத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ மாணவிகளில் சுமார் 122 பேருக்கு கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் கண்கள் சிவத்தல், எரிச்சல் மற்றும் இரட்டைப் பார்வை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலம், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் காந்தி நகரிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அந்தப் பரிசோதனைகளின் முடிவில், 122 மாணவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்துள்ள நிலையில், 2 மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த திடீர் பாதிப்புகளுக்கான காரணத்தைக் கண்டறிய, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தப் பள்ளிக்கூடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அந்தப் பள்ளிக்கூடத்திலுள்ள தண்ணீர் மற்றும் உணவுகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதால், ஆய்வு முடிவுகள் வெளியான பின்னரே மர்ம காய்ச்சலுக்கான காரணம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், சுமார் 250-க்கும் மேற்பட்ட அந்தப் பள்ளிக்கூடத்தில் 122 மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள மாணவர்களின் உடல்நிலையை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.