பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடனம்!
அரசுமுறை பயணமாக பிரேசில் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா சென்றுள்ளார். கானா, டிரினிடாட் & டுபாகோ, அர்ஜென்டினா நாடுகளைத் தொடர்ந்து, 4-ஆவது நாடாக பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ அழைப்பின்பேரில், பிரேசிலுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.
காலியோ சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ஆபரேஷன் சிந்தூரின் கருப்பொருளை மையமாக வைத்து, பிரேசில் வாழும் இந்தியர்கள் கலாசார நடன நிகழ்ச்சியும் நடத்தினர்.
பிரேசிலில், ஜூலை 6, 7 தேதிகளில் நடைபெறும் 17-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் மோடி, இந்த பயணத்தில் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.
பிரேசிலை தொடர்ந்து, இறுதியாக நமீபியா நாட்டுக்கும் பிரதமர் மோடி செல்லவுள்ளார்.
