தெலங்கானாவில் வேலை நேரம் அதிகரிப்பு: நாளொன்றுக்கு 10 மணி நேரம்

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது.

தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக நிறுவனங்களில்(கடைகளுக்குப் பொருந்தாது) தொழிலாளர்களின் வேலை நேரம் நாளொன்றுக்கு 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரம் ஆக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வாராந்திர வேலை நேரம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதன்படி, 48 மணி நேரத்திற்கு மிகாமல் என்ற அளவிலேயே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா அரசின் ‘தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் துறையின்’ முதன்மைச் செயலர் இன்று இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில், குறைந்தபட்சம் 6 மணி நேர வேலை நேரத்துக்கிடையில் 30 நிமிட இடைவெளி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, எக்காரணம் கொண்டும் எந்தவொரு தொழிலாளரும் ஒருநாளைக்கு 12 மணி நேரத்தை கடந்து பணியாற்றக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியிலுள்ள தெலுங்கு தேசம் பிறப்பித்துள்ள 10 மணி நேர வேலை என்ற உத்தரவைப் பின்பற்றி, தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் இப்போது மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.