எலும்பு எச்சங்கள் காணப்பட்டதையடுத்து கால்வாய் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தம் – புதிய பகுதியில் அகழ்வுப் பணி தொடர்கின்றது.

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறும் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுகிழமை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் தற்காலிக கால்வாய் அமைக்கும் பணிகள் இடம்பெற்ற நிலையில் மூன்று இடங்களில் மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கால்வாய் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் புதிய புதைகுழி இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் தோண்டப்பட்ட குழிகளிலும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் 11 ஆம் நாள் அகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

இதன்போது மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியைச் சூழ உள்ள பகுதிகளில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. மேலும் மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் குழிக்குள் மழைநீர் தேங்காது வெளியேறுவதற்கான முன்னேற்பாடாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தற்காலிக கால்வாய் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அண்ணளவாக 20 மீற்றர் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்ட நிலையில் மூன்று இடங்களில் மனித என்பு எச்சங்கள் வெளிவந்ததால் கால்வாய் வெட்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறும் அகழ்வுப் பணிகளோடு இதனையும் இணைத்து தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.

அத்தோடு, செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

அந்தப் பகுதிகளில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த இரண்டாம் திகதி ஆரம்பமாகின.

குறித்த பகுதியில் இடம்பெற்ற அகழ்வின்போது கடந்த 5ஆம் திகதி மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று மேலும் சில மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அவை துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன. அவை தொடர்பான எண்ணிக்கைகள் அறிக்கையிடப்படவில்லை. எதிர்வரும் நாட்களில் அறிக்கையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த எச்சங்களும் குழப்பகரமாககே காணப்படுகின்றமையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

குறித்த பகுதியில் இருந்து கடந்த 4ஆம் திகதி சிறுமியின் ஆடை ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.