இலங்கை நிலையான பொருளாதாரத்துடன் உலகளவில் முன்னேற ஐ.எம்.எவ். பேராதரவு – ஜனாதிபதி அநுரவுடனான சந்திப்பில் தெரிவிப்பு.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
தற்போதைய அரசின் கீழ் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மை எட்டுபட்டுள்ளதால், அந்த வலுவான அடித்தளத்தில் பொருளாதார வளர்ச்சியை அடைவதன் மூலமும் புதிய பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதன் மூலமும் இலங்கையைச் சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு செல்லும் திட்டம் துரிதப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுக்கு விளக்கிய ஜனாதிபதி, அந்த சவால்களுக்கு மத்தியிலும் 2026 வரவு – செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் நினைவு கூர்ந்தார்.
நாட்டில் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதன் மூலம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சுங்க வரிச் சலுகைகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் தொடர்ச்சியைப் பேணுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இலங்கைக்குத் தொடர்ந்து கிடைக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் இதுவரை இலங்கைக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாட்டுக்குக் கிடைக்கும் பொருளாதார வளர்ச்சியின் அனைத்து பயன்களையும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வலியுறுத்தினார்.
இலங்கையைப் பொருளாதார ரீதியாக முன்னோக்கிக் கொண்டு செல்வதில் ஜனாதிபதி தலைமையிலான அரசு மேற்கொண்ட உறுதிப்பாட்டைப் பாராட்டிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இலங்கையை உலகளவில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் தேவையான ஆதரவை வழங்கவும் உடன்பாடு தெரிவித்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான தூதுக்குழுவின் பிரதானி இவான் பாபர்ஜயோஜியோ, சந்தேஷ் துங்கானா, உர்சுலா விரியாடினாடா, தினார் பிரிஹார்டினி, சம்சன் குவாலிங்கனா, ஓஸ்லெம் அய்டின் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வதிவிடப் பிரதிநிதிகளான மார்த்தா வோல்டெமிகேல் மற்றும் மானவி அபேவிக்ரம ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தொழில் மற்றும் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரஸ்ஸல் அப்போன்சு, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதிக் கொள்கைத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.கே.சி. சேனநாயக்க, இலங்கை மத்திய வங்கி சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தவுலகல, நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் பி.கே.ஜி. ஹரிச்சந்திர, நிதிக் கொள்கை சபையின் செயலாளர் கலாநிதி சி. அமரசேகர, பொருளாதார ஆராய்ச்சி பணிப்பாளர் ஜே.எஸ். ஜெகஜீவன் ஆகியோர் பங்கேற்றனர்.
