இமாசலபிரதேசத்தில் 500 மீட்டர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலி!

இமாசலபிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள புல்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார் (வயது 40). அரசு பள்ளி ஆசிரியர். இவரது மகன் தீபக் (15), மகள் ஆர்த்தி (17) பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் குமார் ஒரு காரில் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு மனைவி ஹன்சோ (36), மைத்துனர் ஹேம்ராஜ் (37), நண்பர் ராகேஷ் குமார் (44) ஆகியோருடன் சொந்த கிராமத்துக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

தீசா சான்வாஸ் கிராமம் அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 500 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கவிழுந்து அங்கிருந்த ஒரு பாறை மீது மோது நொறுங்கியது. இதில் காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தை கண்ட கிராம மக்கள் இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைஅடுத்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சிதைந்த காருக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை 6 மணி நேரம் போராடி மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து இமாசலபிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் ‘‘சம்பா மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் 6 பேர் இறந்த செய்தி மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்’’ என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.