வடக்கு, கிழக்கு மக்கள் அரசு பக்கமாம் அதனால் ஹர்த்தால் படுதோல்வியாம் – பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் எகத்தாளம்.

“இனம் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட்டு அரசியல் செய்வதைவிட்டு பொது எதிரியை அறிந்துகொண்டு அதற்காகப் போராடுவதற்கு அரசு ஒன்று தேவை என்ற விடயத்தில் மக்கள் வாழ்கின்றனர். அந்த நோக்கத்தில் வடக்கு, கிழக்கு மக்களும் இருந்ததாலேயே கடந்த திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற ஹர்த்தால் போராட்டமும் படுதோல்வியடைந்துள்ளது.”

இவ்வாறு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“தேசிய மக்கள் சக்தி அரசு பிளவுபட்டு இன்று நாடாளுமன்றத்தில் அரசில் இருக்கும் 52 பேர் எதிர்க்கட்சியில் அமரப் போகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பலரும் எங்களிடம் கேட்டனர். அதற்கு நான், எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல் எங்களில் 43 பேர் தொடர்ந்து எதிர்க்கட்சிப் பக்கமே அமர்ந்திருக்கின்றனர் என்று தெரிவித்தேன்.

எதிர்க்கட்சிக்கு விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லாத சந்தர்ப்பத்தில், சமூகத்தில் பொய் கருத்துக்களை பரப்பி வருகின்றார்கள். அரசியலில் தொண்டைக்குக் களவாக மருந்து குடிக்காதவர்கள் எங்களை விமர்சிக்கின்றனர். இந்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பல்வேறு மாபியாக்கள் தொடர்பில் தெரிவித்திருந்தார்கள். ஆனால், அந்த அனைத்து மாபியாக்களும் தங்களின் அரசியல் பயணத்துக்காகவே கட்டியெழுப்பப்பட்டன என்பதை அவர்கள் மறந்துள்ளனனர்.

எமது நாட்டில் காலம் தொட்டு தெற்குக்குப் புரியாவிட்டாலும் வடக்கு, கிழக்குக்கு ஹர்த்ததால் என்ற சொல் பிரபல்லயமாகும். ஒருசில தோற்றுப்போன அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கடந்த திங்கட்கிழமை ஹர்த்தாலுக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்தன. எனினும், அந்தக் ஹர்த்தால் போராட்டம் தாேல்வியடைந்துள்ளதைச் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

தேர்தலிலும் தோல்வியுற்று மக்கள் மத்தியிலும் அந்தக் கட்சிகள் தோல்வியடைந்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவர் இருக்கும் காத்தான்குடியில் ஹர்த்தால் பாேராட்டம் தோல்வியடைந்துள்ளது. அரசியல் செய்வதற்குத் தலைப்பு இல்லாமல் போகும்போது பல்வேறு தலைப்புக்களை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

அறுகம்பை விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது, அவரது கட்சியின் பொத்துவில் பிரதேச சபையின் தலைவர் வேறு நிலைப்பாட்டில் இருக்கின்றார். மக்களைக் கோபமடையச் செய்ய முன்னர், பொய்யான செய்திகளைச் சமூகமயமாக்குவதற்கு முன்னர் தங்களின் கட்சியைச் சரி செய்துகொள்ளுமாறு தெரிவிக்கின்றோம்.

சூதாட்டம் தொடர்பில் முஸ்லிம் பக்தர் என்ற வகையில் எங்களுக்குக் கொள்கை ரீதியில் ஒரு நிலைப்பாடு இருக்கின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.