படகு விபத்தில் இளைஞர் சாவு – சுண்டிக்குளத்தில் சோகம்.

யாழ். வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வடமராட்சிக் கிழக்கு, சுண்டிக்குளம் பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் இன்று அதிகாலை கரவலை மீன்பிடி நடவடிக்கை இடம்பெற்றது.

அண்மைய நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் அசாதாரண காலநிலை சுண்டிக்குளம் கடல் பகுதியிலும் நிலவியது.

இதன்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் கடலின் அலையில் இருந்து படகை விடுவிப்பதற்கு முயன்ற போது அதே படகு அலையில் சிக்குண்டு அந்த இளைஞர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்தம்பி சசிதரன் என்று தெரியவந்துள்ளது.

சடலம் நித்தியவெட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.