ராஜஸ்தான்: 55 வயதில் 17வது குழந்தையைப் பெற்றெடுத்த தாய்!

ராஜஸ்தான் மாநிலம் லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்த கவாரா – ரேகா தம்பதிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. ரேகா, தன்னுடைய 55வது வயதில் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.

17வது குழந்தையை, கவாரா – ரேகாவின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் என அனைவரும் அன்போடு வரவேற்றிருக்கிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மாவட்டத்தில் தெருவில் கிடக்கும் தேவையற்றப் பொருள்களைப் பொருக்கி அதனை விற்று குடும்பம் நடத்தி வரும் கவாரா – ரேகா தம்பதிக்கு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்17வது குழந்தை பிறந்திருக்கிறது.

இவர்களுக்கு பிறந்த 17 குழந்தைகளில், நான்கு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்ததுமே இறந்துவிட்டன. தற்போது இந்த தம்பதிக்கு 7 மகன்களும் 5 மகள்களும் என 12 பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு மகன்கள், 3 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது

பிள்ளைகளுக்கு திருமணமாகி, அவர்களுக்கு தலா 2 அல்லது 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். இதனால், கவாரா – ரேகா தம்பதி தாத்தா – பாட்டி ஆகிவிட்டார்கள். குடும்பம் கடும் வறுமையில்தான் இருப்பதாகவும், கடன் வாங்கித்தான் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்ததாகவும், பிள்ளைகள் யாரும் பள்ளிக்குச் செல்லவில்ல் என்றும் காவாரா கூறுகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, இது அவருக்கு நான்காவது குழந்தை என்று ரேகா சொல்லியிருந்தார். பிறகுதான் எங்களுக்குத் தெரிய வந்தது இது 17வது குழந்தை என்று. ஏற்கனவே 16 குழந்தைகள் பிறந்ததால், அவரது கருப்பை மிகவும் பலவீனமாக இருந்தது. ரத்தப்போக்கு அதிகமாகும் அபாயம் இருந்தது. ஆனால், நல்லவேளை அவ்வாறு நடக்கவில்லை. தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.