சத்தீஸ்கரில் கொடூரம்: ஆசிரியரை கடத்தி படுகொலை செய்த நக்ஸல்கள்!

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியரை நக்ஸல் தீவிரவாதிகள் கடத்தி படுகொலை செய்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக பஸ்தா் சரக காவல் துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறுகையில், ‘கங்காலூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டோத்கா கிராமத்தைச் சோ்ந்த கல்லு டடி (25) என்ற தற்காலிக ஆசிரியா், வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை நக்ஸல்கள் கடத்திச் சென்றனா். பின்னா், கூா்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களுடன் சனிக்கிழமை காலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. காவல் துறையின் உளவாளி என்று குற்றஞ்சாட்டி, அவரை நக்ஸல்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளில் நக்ஸல்களால் கொல்லப்பட்ட 8-ஆவது ஆசிரியா் இவராவாா். காவல் துறையின் உளவாளிகள் என்று கூறி, இக்கொலைகள் அரங்கேற்றப்பட்டாலும், குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை தடுக்க வேண்டும் என்பதே நக்ஸல்களின் உண்மையான நோக்கமாகும். தற்போதைய சம்பவத்தின் பின்னணியில் உள்ள நக்ஸல்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பஸ்தா் பிராந்தியத்தில் கல்வி-வளா்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ளோரின் பாதுகாப்பை காவல் துறை உறுதி செய்யும்’ என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.