ஜெனிவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் – இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து விவாதம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு (இலங்கை நேரம் மதியம் 1.30 மணி) ஆரம்பமாகின்றது.
இன்று உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் உரையாற்றுவார். இதன்போது, இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.
பின்னர், இலங்கை நேரம் பிற்பகல் 3.45 மணிக்கு இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை குறித்து விவாதம் நடைபெறும். இதில், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் தமது நாடுகளின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பர்.
பிரதிநிதிகளின் கருத்துக்களின் பின்னர், இலங்கை அரசின் நிலைப்பாடு – முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளிப்பார்.
இதேநேரம், இன்று ஆரம்பமாகும் கூட்டத் தொடரில் பிரிட்டன் தலைமையிலான உறுப்பு நாடுகளால் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை குறித்த உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்கள் எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர் நடைபெறும் என்று அறியவருகின்றது.
……………..
