டயரில் எலுமிச்சை வைத்து பூஜை செய்து, மஹிந்திரா தாரை இயக்கிய பெண்ணால் பயங்கர விபத்து!

கிழக்கு தில்லியின் நிர்மான் விகார் பகுதியில், புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் என்ற ஜீப்பை, எலுமிச்சை மீது ஏற்ற முயன்ற பெண், அதனை முதல் மாடியிலிருந்து கீழே கரப்பான் பூச்சி போல கவிழ்த்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காஸியாபாத்தைச் சேர்ந்த மாணி பவார் (29) என்ற பெண், தனது கணவருடன் மஹிந்திரா வாகன விற்பனையகத்துக்கு வந்தார். ரூ.27 லட்சம் மதிப்புள்ள தார் வகை ஜீப்பை வாங்கிய அவர், டயர்களுக்கு அடியில் எலுமிச்சையை வைத்து பூஜித்து வாகனத்தை இயக்க முற்பட்டார்.

ஆனால், அது மோசமான விபத்தில் முடிந்தது. வாகன விற்பனையகத்தின் முதல் மாடியில் நிறுத்தப்பட்டிருந்த தார் வாகனத்தை இயக்கிய அவர், முதல் மாடியின் கண்ணாடிச் சுவரை இடித்துக் கொண்டு கீழே விழுந்துள்ளது.

நல்வாய்ப்பாக, தார் வாகனத்தில் இருந்த காற்றுப் பைகள் மேலெழும்பி, மாணி பவார், அவரது கணவர், மற்றும் கடையின் விற்பனையாளர் விகாஸ் ஆகியோரைக் காப்பாற்றியது.

தலைகீழாகக் கவிழ்ந்த வாகனத்துக்குள் இருந்து மூவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து நடந்தபோது, அதிர்ஷ்டவசமாக, அங்கு யாரும் இருந்திருக்கவில்லை. இருந்திருந்தால் உயிர்பலி ஏற்பட்டிருக்கும்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பலரும், தங்களது செல்போனில் இந்த காட்சியை படமெடுத்துச் சென்றனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடையின் கீழ் தளத்தில், தார் வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்து கிடக்கும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.