காலைத் தொட்டு வணங்க மறுப்பு: மாணவ, மாணவியரைத் தாக்கிய ஆசிரியை சஸ்பெண்ட்

ஒடிசா மாநிலம் மயூர்பாஜி மாவட்டம் கண்டடிலுலா கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுகந்தி கர் என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, பள்ளியில் வழக்கமான இறை வணக்கத்திற்குப்பின் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் தனது காலை தொட்டு வணங்க வேண்டும் என்று ஆசிரியை சுகந்தி கர் வற்புறுத்தியுள்ளார். கடந்த சில வாரங்களாக மாணவ, மாணவியர் ஆசிரியை சுகந்தியின் காலை தொட்டு வணங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை இறை வணக்கத்திற்குப்பின் தனது காலை தொட்டு வணங்க மாணவ, மாணவியரை ஆசிரியை சுகந்தி வற்புறுத்தியுள்ளார். ஆனால், சுகந்தியின் காலை தொட்டு வணங்க மாணவ, மாணவியர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுகந்தி, பிரம்பு கம்பால் மாணவ, மாணவியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், மாணவ, மாணவியர் பலர் காயமடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காலை தொட்டு வணங்காததால் மாணவ, மாணவியரை ஆசிரியை தாக்கியது உறுதியானதையடுத்து சுகந்தி கரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.