ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படமாட்டாதாம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து
செயற்படுவது பற்றி பேச்சு நடக்கின்றதாம்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்படமாட்டாது என்று அந்தக் கட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்து. இதனை நாமும் ஏற்கின்றோம். இணைவு என்பது இரு தரப்புகளும் ஒரு கட்சியின் கீழ் சங்கமிப்பதா அல்லது கூட்டணியா என்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லை.

ஒருமித்த கருத்துடைய இரு தரப்புகளின் ஒற்றுமை என்பது மிக முக்கியம். பிரிந்திருந்ததால்தான் ஜனாதிபதித் தேர்தலில் எமக்குப் பின்னடைவு ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியில் கீழ்மட்ட அரசியல் இயந்திரம் வலுவிழந்துள்ளது. அந்தக் கட்சி ஆதரவாளர்களில் 99 சதவீதம் பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன்தான் இருக்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க எமது அரசியல் குரு. அவர் கைது செய்யப்பட்டபோது நாம் கவலை அடைந்தோம். அதற்கு எதிராகக் குரல் கொடுத்தோம்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, ஐக்கிய மக்கள் சக்தி கலைக்கப்பட மாட்டாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது பற்றி பேசப்பட்டு வருகின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.