ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் மும்பை அபார வெற்றி.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதலாவது தகுதி சுற்றில் டெல்லி கேப்பிட்டல்சை புரட்டியெடுத்த மும்பை அணி இறுதிப்போட்டியை எட்டியது.

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு டுபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதியது. மும்பை அணியில் 3 மாற்றமாக ஓய்வில் இருந்த பும்ரா, டிரென்ட் பவுல்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் திரும்பினர். இதனால் சவுரப் திவாரி, தவால் குல்கர்னி, பேட்டின்சன் நீக்கப்பட்டனர்.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் மும்பையை துடுப்பாட்டம் செய்ய பணித்தார். இதன்படி கப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி கொக்கும் மும்பை அணியின் இன்னிங்சை முதல் ஓவரிலேயே 3 பவுண்டரியுடன் தொடங்கினர். 2-வது ஓவரில் அஸ்வின் சுழலில் ரோகித் சர்மா (0) துல்லியமான எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு டி கொக்குடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி காட்டி ஓட்ட வீதத்தை உயர்ந்தினர்.

பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 63 ஓட்டங்களை பெற்றனர். இந்த தொடரிலே பவர்-பிளேயில் மும்பையின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஸ்கோர் 78 ரன்களாக உயர்ந்த போது குயின்டான் டி கொக் 40 ரன்களில் (25 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் வெளியேறினார்.

இந்த தொடரில் 4-வது அரைசதத்தை கடந்த சூர்யகுமார் யாதவ் 51 ரன்களில் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த பொல்லார்ட் (0) அஸ்வின் சுழலில் சிக்கினார். அப்போது மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 101 ரன்களுடன் (12.2 ஓவர்) லேசான தடுமாற்றம் கண்டது. இந்த சூழலில் இஷான் கிஷனும், குருணல் பாண்ட்யாவும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.

 

இதைத் தொடர்ந்து இஷான் கிஷனும், ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து இறுதி கட்டத்தில் ரபடா, நோர்டியாவின் ஓவர்களில் ஹர்திக் பாண்ட்யா தலா 2 சிக்சர்களை அடித்தார்.இதன் பின்னர் கடைசி பந்தில் இஷான் கிஷன் சிக்சரோடு 200 ரன்களை தொட வைத்ததுடன் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.

பின்னர் 201 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு முதல் ஓவரிலேயே வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் அவரது ஓவரில் பிரித்வி ஷா (0), அடுத்து வந்த ரஹானே (0) வீழ்ந்தனர். இதன் பின்னர் ஷிகர் தவான் (0), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (12ரன்) ஆகியோரை மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா வெளியேற்றினார்.

20 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணியால் ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடிய மார்கஸ் ஸ்டோனிஸ் (65 ரன், 6 பவுண்டரி, 3 சிக்சர்), அக்‌ஷர் பட்டேல் (42 ரன்) அணி 100 ரன்களை கடக்க உதவினர்.

20 ஓவர்களில் டெல்லி அணியால் 8 விக்கெட்டுக்கு 143 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. மும்பை தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தோல்வி அடைந்தாலும் டெல்லி அணிக்கு இறுதிசுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி காணும் அணியுடன் டெல்லி அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நாளை மறுதினம் மோதும்.

Leave A Reply

Your email address will not be published.