ஆந்திரா: பட்டாசு ஆலையில் பெரும் வெடி விபத்து! 6 தொழிலாளிகள் பலி; 8 பேர் படுகாயம்.

ஆந்திரப் பிரதேசத்தின், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடி விபத்தில், 6 தொழிலாளிகள் உடல் கருகி பலியாகினர்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தின், கோமரிபாலம் கிராமத்தில், செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று (அக். 8) மதியம் மிகப் பெரியளவில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த காவல் மற்றும் தீயணைப்புப் படையினர், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், ஆலையினுள் இருந்த 15 தொழிலாளிகளில் 6 பேர் தீயில் கருகி பரிதாபமாகப் பலியாகினர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், இருவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்துடன், இந்தச் சம்பவத்தில் பலியான தொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் உள் துறை அமைச்சர் வி. அனிதா ஆகியோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.