காட்டு யானைகள் அட்டகாசம்! 33 தென்னை மரங்கள் நாசாம்!!

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் இன்று அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரக்கூடிய 33 தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன.

அதிகாலை 2 மணியளவில் புறத்தோட்டம் பகுதிக்குள் மூன்று காட்டு யானைகள் உட்புகுந்து ஏ.ஆர். உபைதுல்லா என்பவரின் காணியில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 33 பயன்தரும் தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன.

மேலும், குறிப்பிட்ட இந்த மூன்று காட்டு யானைகளும், இந்தப் பகுதியிலுள்ள வீடுகளுக்குச் செல்ல முற்பட்ட போதிலும் மக்கள் வீதிகளுக்கு வந்து சத்த வெடில் சுட்டு யானைகளை விரட்டியுள்ளனர். இதன் மூலம் இன்னும் பாரிய அழிவுகள் தடுக்கப்பட்டுள்ளன என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது எனவும், இதற்குப் பிரதான காரணம் பிரதேச சபையின் அருகில் உள்ள தனியார் காணியொன்றில் பிரதேச சபையால் தொடர்ச்சியாகக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதேயாகும் எனப் பாதிக்கப்பட்ட தென்னம் தோட்ட உரிமையாளர் கவலையுடன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லைப் பகுதியில் யானை வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நீண்ட காலமாக முன்வைத்துள்ள போதிலும், இதுவரை யானை வேலிகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

எனவே, புறத்தோட்டம் கிராமத்துக்குள் காட்டு யானைகள் உட்புகுந்து மக்களின் உடமைகளையும், பயிர்களையும், தென்னை மரங்களையும் அழித்துச் சேதப்படுத்துவதை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.