அநுர அரசுக்கு எதிராக கொழும்பில் நவம்பர் 11 இல் பெரும் பேரணி! – ரணில் – சஜித் தீர்மானம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகாரப் போக்குக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்த எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டுள்ளன.

இந்தப் பேரணியை எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி நடத்துவதற்கும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பங்களிப்புடன் நடத்துவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்த அரசியல் பயணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் எதிர்ப்புப் பேரணிக்கான கூட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி நுகேகொடையில் ஆம்பிக்கப்படவுள்ள இந்த அரச எதிர்ப்புப் பேரணியை நாடளாவிய ரீதியில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு வருட கால இடைவெளிக்குப் பிறகு ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்ப்புப் பேரணியை நடத்தத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.