கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி இன்று உரிமையாளர்களிடம் கையளிப்பு.

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ள நிலையில், இன்று புதன்கிழமை நீதிமன்றத்தின் மூலம் அந்தக் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

கோப்பாய், இராச வீதியில் அமைந்துள்ள கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி பல வருடங்களாகப் பொலிஸாரின் கட்டுப்பாட்டிலும், பயன்பாட்டிலும் உள்ளது.

அந்தக் காணியின் உரிமையாளர்கள், காணியைத் தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், அதற்குப் பலன் கிட்டவில்லை.

இந்தநிலையில், 2019 ஆம் ஆண்டு, காணிகளுக்குச் சொந்தமான 9 உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதன்போது பொதுமக்களின் காணியில் இருந்து வெளியேறி, அந்தக் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்று மாவட்ட நீதிபதி சி.சதீஸ்கரன் உத்தரவிட்டார்.

எனினும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொலிஸார் காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவில்லை.

இந்தநிலையில், இன்று புதன்கிழமை நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற, நீதிமன்றப் பதிவாளர் கோப்பாய் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று, அங்குள்ள பொலிஸாரை வெளியேற்றி, காணியை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.

அதேவேளை கோப்பாய் பொலிஸ் நிலையத்தை உரும்பிராய் பகுதிக்கு மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. பகுதியளவில் இடமாற்ற நடவடிக்கைகள் முடிந்துள்ளன. எனினும், முழுமையான இடமாற்றம் நடந்து முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.