மிகப்பெரிய சைபர் மோசடி: ‘டிஜிட்டல் கைது’ மிரட்டல்; தொழிலதிபர் குடும்பத்திடம் ரூ.58 கோடி சுருட்டல்!

மும்பை: அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் போல நடித்து 72 வயதான தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக மிரட்டி ரூ.58 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது.

நாட்டிலேயே, இப்படி ஒரு சைபர் மோசடியில், ஒரு தனி நபர் இழந்த அதிகப்படியான தொகையாக இது இருப்பதாக காவல்துறை கூறியிருக்கிறது.

இந்த சம்பவத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகள் போல விடியோ அழைப்பில் பேசி, தாங்கள் உண்மையான அதிகாரிகள் என நம்ப வைக்க போலியான ஆவணங்களைக் காண்பித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இரண்டு மாதங்களில் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.58 கோடியை பறிமாற்றம் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குக்கு தலா ரூ.25 லட்சம் கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த ஆக. 19ஆம் தேதி சுப்பிரமணியம், கரன் ஷர்மா என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட இரண்டு பேர், ஏராளமான செல்போன் எண்களிலிருந்து தொடர்புகொண்டு சிபிஐ அதிகாரிகள் போல பேசியிருக்கிறார்கள். தொழிலதிபரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாகவும், அவருடன் அவரது மனைவியையும் இணைக் குற்றவாளியாக சேர்த்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

அவர்களது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை சிபிஐக்கு அனுப்ப வேண்டும் என்றும், விசாரணை முடிந்த பிறகு அனைத்துத் தொகையும் திரும்ப அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள்போல உறுதி கூறியிருக்கிறார்கள்.

இதனை நம்பி தொழிலதிபரும் மோசடியாளர்கள் கொடுத்த வங்கிக் கணக்கு எண்களுக்கு ஏமாந்து பணத்தை அனுப்பியிருக்கிறார்.

இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த பணம் 18 வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

குற்றவாளிகள் மீது மோசடி, ஆள்மாறாட்டம், குற்றவியல் சம்பவத்தில் ஈடுபடுவது என பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.