வவுனியா வடக்கு கல்வி நிலைய மோசடி- வடக்கு அதிகாரிகள் 12 பேருக்கு சிக்கல்: FCID விசாரணை

வவுனியா வடக்கு கல்வி நிலைய மோசடி:

வடக்கு அதிகாரிகள்
12 பேருக்கு சிக்கல்!

– எவ்.சி.ஐ.டி. விசாரணை தீவிரம்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர், கணக்காளர், வலயப் பணிப்பாளர் என 12 பேர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை வலயத்தில் உள்ளனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் 21 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டமை வெளித் தெரியவந்ததையடுத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதேநேரம் மாகாணப் பிரதம செயலாளர் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றையும் நியமித்தார்.

இதையடுத்து மாகாண ரீதியில் விசாரணை இடம்பெறும் அதேநேரம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மாகாணக்  கல்வி அமைச்சின் செயலாளர், பணிப்பாளர், கணக்காளர் ஆகியோருடன் வலயத்தின் கல்விப் பணிப்பாளர், கணக்காளர் என கணக்குக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் என மொத்தம் 12 பேர் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு இடம்பெற்ற விசாரணைகள் நேற்று முழுநாளும் இடம்பெற்றது.

நேற்று இடம்பெற்ற விசாரணைகள் நிறைவு பெறாத நிலையில் இன்றும் விசாரணை முன்னெடுப்பதற்காக அனைவரும் கொழும்பிலேயே மறிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய விசாரணைகளின் பின்பே இதன் இறுதி நிலைவரங்கள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.