யாழ். கச்சேரிக் கூட்டத்தில் பங்கேற்ற கோப்பாய் பிரதேச செயலர், தவிசாளரை தனிமைப்படுத்தப் பணிப்பு

யாழ். கச்சேரிக் கூட்டத்தில் பங்கேற்ற

கோப்பாய் பிரதேச செயலர், தவிசாளரை
உடனடியாகத் தனிமைப்படுத்தப் பணிப்பு

– ஏனையவர்களின் நிலைமை தெரியவரவில்லை

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி – சுகாதார நடைமுறைகளைப் புறந்தள்ளி யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற அமைச்சர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட கோப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு கோப்பாய் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிப்புரை வழங்கியுள்ளமை தொடர்பில் சர்ச்சை எழுப்பப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 200 பேர் வரையில் கலந்துகொண்ட போதிலும் ஒரு பிரதேச செயலாளர் பிரிவின் சுகாதார வைத்திய அதிகாரி மட்டுமே தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார். இந்தநிலையில், கடமை நிமிர்த்தம் சென்றமைக்குத் தனிமைப்படுத்தல் என்பதால் பணியாற்ற அச்சமாகவுள்ளது என ஏனைய உத்தியோகத்தர்கள் அவசரமாக மாவட்ட செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

தனிமைப்படுத்தல் அறிவித்தல் வழங்கப்பட்டமை தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலாளரும் உறுதி செய்துள்ள நிலையில் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏனைய உயர் அதிகாரிகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய கூட்டத்தின் சர்ச்சை ஓய்வதற்கு முன்பு நாளைமறுதினமும் கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகாரிகள் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.