கிளிநொச்சியில் காணாமல்போன இளைஞர் 9 நாள்களின் பின் காட்டுக்குள் சடலமாக மீட்பு!

வெளிநாடு செல்ல இருந்த நிலையில் சோகம்
பொலிஸார் பல கோணங்களில் விசாரணை

கிளிநொச்சியில் காணாமல்போன இளைஞர் ஒருவர் காட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யூனியன் குளத்தைச் சேர்ந்த அப்சரன் (வயது 26) எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி இளைஞர் கடந்த 24ஆம் திகதி வெளிநாட்டுக்குப் பயணமாக இருந்த நிலையில் ஐந்து தினங்களுக்கு முன்னர் – கடந்த 19ஆம் திகதி முதல் காணாமல்போனார்.

காணாமல்போன மகனை பெற்றோர்த் தேடி வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் உறவினர்களும் இளைஞரைத் தேடி வந்தனர்.

இந்தநிலையில் இளைஞரின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள காட்டினுள் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்று அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இளைஞரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.