அரசுக்கு எதிரான நுகேகொடைப் பேரணியில் மஹிந்த, ரணிலைக் களமிறக்குவதற்கு முயற்சி.

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிரான மக்கள் பேரணியில் முக்கிய அரசியல் புள்ளிகளைக் களமிறக்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை களமிறக்குவதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன பங்கேற்றாலும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையிலேயே கூட்டத்தில் உரையாற்றாவிட்டாலும், வந்து அமர்ந்திருக்குமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

நுகேகொடை பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்பதால் அந்தப் பேரணியில் முக்கியத்துவம் குறையக்கூடாது என்பதற்காகவே இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், மேற்படி தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது பற்றி இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.