அம்பலாங்கொடை நகரில் இன்று வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை! – நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டை.
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்துக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த வர்த்தகர், பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
55 வயதான நிலந்த வருஷ விதான என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிதாரிகள் வந்த கார் வேறொரு இடத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர், பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தா என்பவரின் மைத்துனர் எனத் தெரியவருகின்றது.
இது தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
