கரூர்: காதலை முறித்த ஆத்திரத்தில் கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிவிட்டு தப்பிய நபர் கைது!
கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொடூர தண்டணை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், மாவத்தூர் ஊராட்சி குளக்காரன்பட்டியை சேர்ந்தவர் அந்த 21 வயது இளம் பெண். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கிபடித்து வருகிறார்.
காதலை முறித்துக் கொண்ட பெண்
அதே ஊரை சேர்ந்த டிராக்டர் டிரைவரான ரஞ்சித் என்பவரை அந்த இளம் பெண் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவரது நடவடிக்கைகளில் சரியில்லை என்பதை உணர்ந்து கொண்ட அந்த பெண் அவருடனான காதலை முறித்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆத்திரமடைந்த ரஞ்சித், தன்னை அந்த பெண் காதலித்து ஏமாற்றி விட்டதாக உணர்ந்த ரஞ்சித் கடும் கோபத்தில் அவரை பழிவாங்க திட்டம் போட்டிருக்கிறார்.
அதன்படி இரவு 11.30 மணியளவில் கொதிக்க வைத்த எண்ணெய்யை எடுத்து வந்த ரஞ்சித் காதலியின் வீட்டிற்கே சென்று ஜன்னல் வழியாக அந்த கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியுள்ளார்.
தூக்கத்தில் இருந்த பெண் மீது கொதிக்கும் எண்ணெய் பட்டதால் அலறித் துடித்துள்ளார். பதறிப்போன பெற்றோர் மகளை மீட்டுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ரஞ்சித் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
