வடக்கு, கிழக்கில் நவம்பர் 13 இல் இருந்து பருவமழை அதிகரிக்கும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 13ஆம் திகதியில் இருந்து பருவமழை அதிகரிப்பதற்குச் சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியல்துறைப் பேராசிரியரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-

“வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்று 5 ஆம் திகதி தொடக்கம் பருவமழை கிடைக்கின்றது. எதிர்வரும் 11ஆம் திகதி வரை நீடிக்கும் இந்தப் பருவழை எதிர்வரும் 13ஆம் திகதியில் இருந்து அதிகரிப்பதற்குச் சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன.

வடகீழ்ப் பருவமழை இதுவரை நாம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. இதனால் இவ்வருடம் போதிய மழை கிடைக்காமல் விடுவதற்குச் சாத்தியங்கள் உள்ளன என்று பலர் அச்சப்படுகின்றனர். ஆனால், ஏற்கனவே கணிக்கப்பட்டதற்கு அமைய இந்த வருடத்தில் போதியளவு பருவமழை கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன.

வழமையாக வடக்கு மாகாணத்தை விட கிழக்கு மாகாணமே கூடுதலாக மழை வீழ்ச்சியைப் பெறுவதுண்டு. ஆனால், இம்முறை வழமைக்கு மாறாக வடக்கு மாகாணம் அதிக மழையைப் பெற்றுள்ளது. காலநிலை மாற்றம், எதிர்காலத்தில் பல வியக்கத்தக்க ஆச்சரியங்களையும், விரும்பத்தகாத மாற்றங்களையும் எங்கள் பிரதேசங்களின் வானிலைக் கோலங்களில் ஏற்படுத்தும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.