இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை புதுடில்லியில் நேற்று சந்தித்துப் பேசிய சஜித்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான அஜித் தோவலை நேற்று வெள்ளிக்கிழமை புதுடில்லியில் சந்தித்தார்.
கடல்சார் இணைப்பு, திறன் மேம்பாடு மற்றும் நவீன மேம்பட்ட தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, தெற்காசிய நாடுகளிடையே பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்து இதன்போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.
தகவல் பரிமாற்றம், பிராந்திய மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீண்டும் இங்கு வலியுறுத்தினார்.
பொருளாதார மற்றும் எரிசக்தி கூட்டாண்மைகள், பேரிடர் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்ச்சியான பலதரப்பு முயற்சிகளை வலுப்படுத்தக் கொழும்பில் ஒரு நிரந்தர செயலகத்தை நிறுவுதல் போன்ற புதிய துறைகளுக்கு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்தச் சந்திப்பில் முன்மொழிந்தார்.
