அதிர்ச்சி! கழிவுத் தாளில் மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறிய அரசுப் பள்ளி – ம.பி.யில் விடியோவால் பரபரப்பு!

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு தாளில் மதிய உணவு பரிமாறப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம், ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள ஹுல்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு தட்டிற்கு பதிலாக, தாளில் பரிமாறப்பட்டது. மாணவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்பட்ட விடியோ சமூகஊடகங்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஷியோபூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில் இந்த சம்பவம் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சத்துணவு பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு தரவுகளின்படி, நவம்பர் 6ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள 88,299 பள்ளிகளில் 87,567 பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் வழங்கப்பட்டது. அதேசமயம் அதே நாளில் 732 பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.