எந்த முறைமையில் மாகாண சபைத் தேர்தல்? சர்வகட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு கோரிக்கை – பிரதமரிடம் விடுக்கவுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் விதம் பற்றி ஆராய்ந்து இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இது தொடர்பில் பிரதமருக்கு இன்று அல்லது நாளை எழுத்து மூலம் தெரியப்படுத்தப்படவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பட்ஜட் உரையின்போது குறிப்பிட்டிருந்தார்.
கட்சித் தலைவர்கள் கூடி பொருத்தமான முறைமை தொடர்பில் தீர்மானம் எடுத்தால், அதற்கமைய தேர்தலை நடத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
