கல்வி வெளியீட்டுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் இன்று சடலமாக மீட்பு!
மன்னார் – யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு – பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் (வயது 60) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இன்று காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரியவருகின்றது.

சடலத்தைக் கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் மேலதிக நடவடிக்கைகளுக்காகச் சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
