கொழும்பில் 50 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வீட்டில் வசிக்கும் பிரதி அமைச்சர் – நாடாளுமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பிய எதிரணி.

அநுர அரசின் பிரதி அமைச்சர் ஒருவர் கொழும்பில் 50 கோடி ரூபா மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றார் என்றும், அதை அவருக்கு யார் நன்கொடையாக அளித்தார்கள் என்றும் எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளனர்.

வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆளும் கட்சியினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்படி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நீதிமன்ற வழக்குகளுக்காக இந்தப் பிரதி அமைச்சரை ஜே.வி.பி. தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்தப் பிரதி அமைச்சர் இந்த அடுக்குமாடி குடியிருப்பை எப்படி வாங்கினார்? அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பை யார் கொடுத்தார்கள்? அர்ஜுன் அலோசியஸ் அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பைக் கொடுத்தாரா? அல்லது அர்ஜுன் அலோசியஸ் போன்ற பணக்கார நண்பரிடமிருந்து வந்ததா?

இந்த அரசில் மற்றொரு உயர் அதிகாரி ஒருவர் அடிக்கடி கமிஷன் தேடுகின்றார்.

சட்டவிரோதமாகக் கொள்கலன்களை அகற்றுவதில் ஈடுபட்டுள்ள மற்றொரு அமைச்சர் இருக்கின்றார். கப்பல் போக்குவரத்து என்ற தலைப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது அவரை நிரபராதியாக்காது.

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனிப் பத்திர ஊழல், சர்க்கரை ஊழல் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊழல் பற்றிப் பேச முடியாது.

இதேவேளை, இந்த அரசில் உள்ள சில அமைச்சர்கள் சில பாதாள உலகக் குழு நபர்களைச் சார்ந்து இருக்கின்றனர். ஆனால், அவர்கள் சுதந்திரமாக நடமாட மற்றவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.