அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தல் உறுதி! தேசிய மக்கள் சக்தியே வெற்றிநடை போடும்!! – எதிரணிக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலடி.

இலங்கையில் ஒன்பது மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசு அஞ்சுகின்றது என்று முன்வைக்கப்படும் எதிரணிகளின் குற்றச்சாட்டை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அடியோடு நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“அடுத்த வருடம் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். எதிரணிகள் கூட்டணி வகுத்து வந்தால்கூட ஆளுங்கட்சியே வெற்றிநடை போடும். எதிரணிகள் மண்கவ்வும்.

தேசிய மக்கள் சக்தி அரசு கவிழாது. மக்கள் சக்தி எமக்கு இருக்கின்றது.” – என்றார்.

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டிருந்தாலும் தேர்தல் முறைமை தொடர்பில் குழப்பம் நீடிக்கின்றது.

தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்தல் முறைமை தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காகப் பிரதமர் தலைமையில் குழுவொன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.