திருகோணமலை புத்தர் சிலை சம்பவம்: பொலிஸாரை இடைநீக்கம் செய்யுங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து.

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் செய்துவிட்டே, அந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ. அலவத்துவல இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு:-

“நான் இனவாதி அல்லன். எனினும், திருகோணமலை சம்பவம் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். அந்தச் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரப்படும் என ஜனாதிபதி கூறி இருந்தார்.

பொலிஸாரின் நடத்தை அவ்வளவு நல்லதாக இருக்கவில்லை. பொலிஸார் எவ்வாறு செயற்பட முடியும்? இது குறித்து வெட்கப்பட வேண்டும்.

இந்தச் சம்பவத்துடன் அரசாங்கம், அமைச்சர்கள் தொடர்பில்லையெனில், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்துவிட்டே, விசாரணை நடத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.