நுகேகொடைக் கூட்டம் வெற்றிகரமானதாம்! சஜித் அணியும் களமிறங்க வேண்டுமாம்!! – இப்படிக் கூறுகின்றார் அக்கட்சி எம்.பி.
அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காத நிலையில், அந்தக் கூட்டத்தை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
நுகேகொடை கூட்டம் வெற்றிகரமானது எனவும், இதுபோன்ற நடவடிக்கையை தமது கட்சியும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நுகேகொடைக் கூட்டத்துக்கு எவரையும் வலுக்கட்டாயமாக அழைத்து வரவில்லை. அவ்வாறு அழைத்து வந்திருந்தால் கொட்டும் மழைக்கு மத்தியில் மக்கள் நின்றிருக்கமாட்டார்கள். கூட்டம் மூலம் வழங்கப்பட்ட செய்தியை அநுர அரசு உணர வேண்டும்.” – என்றார்.
அதேவேளை, கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரின் அடுத்த கூட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்கும் என ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
