சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழு கலந்துரையாடல்.

கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்தும் தேசிய வேலைத் திட்டம்- சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்திக் குழு கலந்துரையாடல்

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று 08.11.2020 நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ்
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் , இராஜாங்க அமைச்சர்கள், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், சி.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் , ஆளுநரின் செயலாளர், பிரதம செயலாளர்,யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) , யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) அமைச்சிக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், முப்படைகளின் பிரதானிகள், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச செயலாளர்கள்,மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சமூக கட்டமைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.1000 பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் முதற்கட்டமாக 10 பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 16 பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு 2950 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 02 தேசியப் பாடசாகைள் உள்ள நிலையில் முதல் கட்டத்தில் 02 பாடசாலைகளும் இரண்டாம் கட்டத்தில் 6 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டு 900 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அத்துடன்,ஜப்பான், கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி இளைஞர் யுவதிகளை அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி இளைஞர் யுவதிகளுக்கும் உள்வாங்கப்பட்டு மொழிரீதியான பயிற்சிகளும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான நலனோம்பு நடவடிக்கைகளும் குறித்த இரு மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.