இலங்கையில் அவசரகாலச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டு.
இலங்கையில் பேரிடரையடுத்து அமுலுக்கு வந்த அவசரகாலச் சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
“பேரிடர் நிலைமையை எதிர்கொள்ளவே அது அமுல்படுத்தப்பட்டது. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படவில்லை.” – என்றும் ஊடகங்களிடம் அவர் கூறியுள்ளார்.
எனினும், அவசரகாலச் சட்டம் ஒடுக்குமுறை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது என எதிரணி குற்றஞ்சாட்டி வருகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் அண்மையில் ஆற்றிய உரையின்போது இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.
அதேவேளை, அவசரகாலச் சட்டத்தின் கீழ் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக எவரேனும் கருதினால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யலாம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அவசரகால விதிமுறைகள் அரசமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமால் புஞ்சிஹேவ சுட்டிக்காட்டியுள்ளார்.
1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் கீழ், இதுபோன்ற எந்தவொரு முறைப்பாட்டையும் விசாரிக்க ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
