கரைதுறைப்பற்று பிரதேச சபையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!
முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச சபையைத் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்த முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் தவிசாளராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அவர் கடந்த நவம்பர் மாத இறுதிப் பகுதியில் தனது பதவியை இராஜிநாமா செய்திருந்தார்.

அதன் அடிப்படையில் புதிய தவிசாளரைத் தேர்தெடுப்பதற்கான கூட்டம் இன்று வடக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
தவிசாளர் பதவி போட்டிக்குத் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இமக்குலேற்றா புஸ்பானந்தன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த தொம்மைப்புள்ளை பபுல்ராஜ், இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மிக்கேற்பிள்ளை ஜோன்சன் மோகனராஜா ஆகிய மூவரும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இமக்குலேற்றா புஸ்பானந்தன் மற்றும் தொம்மைப்புள்ளை பபுல்ராஜ் இடையில் போட்டி நிலவியது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் 14 வாக்குகளைப் பெற்று புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
