கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி விலகாவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும் – மொட்டுக் கட்சி பகிரங்க எச்சரிக்கை.

கல்வி அமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகித்து வரும் ஹரிணி அமரசூரிய உடனடியாகக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகாவிடின், நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“ஒரே நபர் பிரதமர் பதவியையும் கல்வி அமைச்சர் பதவியையும் ஒரே நேரத்தில் வகிப்பது அரசியல் நெறிமுறைகளுக்கும் நிர்வாக ஒழுங்குக்கும் முரணானது.

குறிப்பாக, கல்வித்துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அதற்கான முழுக் கவனமும் பொறுப்பும் அவசியமாகும்.

கல்வி துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள், ஆசிரியர் நியமனங்கள், பல்கலைக்கழக நிர்வாக விவகாரங்கள் மற்றும் மாணவர்களைப் பாதிக்கும் கொள்கை முடிவுகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி வருகின்றது.

இந்த நிலை தொடருமானால், மக்கள் தங்களது அதிருப்தியை வீதியில் வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அரசு மக்களின் குரலைக் கேட்காவிட்டால், மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போவார்கள். அதற்கான முழுப் பொறுப்பும் அரசின் மீதே இருக்கும்.

கல்வி அமைச்சுப் பொறுப்பை முழுமையாகக் கவனிக்கக்கூடிய தனி அமைச்சரை நியமிப்பதே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற தீர்வாக இருக்கும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.