உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நில அளவையாளரான அசோக் ராதி (வயது 40) என்பவர் சரஸ்வா பகுதியிலுள்ள அவர்களது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், அசோக் ராதி அவரது மனைவி அஜந்தா (37), மகன்கள் கார்த்திக் (16), தேவ் (13) மற்றும் அவரது தாய் வித்யவதி (70) ஆகியோர் இன்று (ஜன. 20) காலை அவர்களது வீட்டில் ஒரே அறையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள் ஒரே அறையில் கண்டெடுக்கப்பட்ட 5 பேரின் சடலங்களைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, சஹாரன்பூர் காவல் துறை உயர் அதிகாரி அஷீஷ் திவாரி கூறுகையில், 5 பேரின் தலையிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்துள்ளதாகவும், அசோக் ராதி உடலின் அருகில் 3 நாட்டுத் துப்பாக்கிகள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இத்துடன், சம்பவம் நடைபெற்ற வீட்டில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பதைக் கண்டறியும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.