“நாளை பேசுகிறேன் அப்பா..” – தந்தைக்கான கடைசி அழைப்பாக மாறியது; விமான விபத்தில் பலியான பணிப்பெண்ணின் உருக்கமான கதை!
அஜித் பவாருடன் விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் ஒருவர், தனது தந்தையுடன் பேசிய கடைசி அழைப்பு குறித்த தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் பரமதி அருகே விபத்துக்குள்ளானதில், அவருடன் இருந்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.
இதில் விமான பணிப்பெண் பிங்கி மாலியின் கடைசி தொலைபேசி உரையாடல் அவரது தந்தை சிவகுமார் மாலியை கண்கலங்க வைத்துள்ளது.
பிங்கி, Worli (மும்பை) பகுதியைச் சேர்ந்தவர். விபத்திற்கு முன் தந்தையிடம், “அப்பா, நான் அஜித் பவாருடன் பரமதிக்கு பறக்கிறேன். அவரை இறக்கிவிட்டு நான்டேடுக்கு போகிறேன். நாளை பேசுவோம்” என்று கூறியுள்ளார்.
துயரத்தில் மூழ்கிய பிங்கியின் தந்தை, “என் மகளை இழந்துவிட்டேன். என்ன நடந்தது என தெரியாது. குறைந்தபட்சம் அவரது உடலைப் பெற்று இறுதி சடங்கு செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
விமானத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விடிப் ஜாதவ், விமான பணிப்பெண் பிங்கி மாலி, பைலட் சுமித் கபூர் மற்றும் துணை பைலட் ஷம்பாவி பாதக் ஆகியோர் இருந்தனர்.
இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து இன்று காலை 8.50 மணிக்கு பரமதி விமான நிலையம் அருகே நடந்தது.
Learjet 45 வகை விமானம் (VT-SSK) மும்பையிலிருந்து 8.10 மணிக்கு புறப்பட்டு, 8.45 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்தது. சில நிமிடங்களில் அது தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது.
அஜித் பவார், புனே மாவட்டத்தில் நடைபெறவிருந்த தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நடந்தது.
இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலையும், விமானப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
