வடக்கு – கிழக்கில் இன்று கரிநாள் போராட்டங்கள்!

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற கோஷத்தை முன்வைத்தும், எட்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வடக்கு – கிழக்கில் போராட்டங்களுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

மாணவர்களின் இந்த அழைப்புக்குத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், பொது அமைப்புகள், வணிகர் சங்கங்கள், கடற்றொழிலாளர் அமைப்புகள், சமூக நிறுவனங்கள் எனப் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அத்துடன், இன்று முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியிலும், மட்டக்களப்பிலும் கவனவீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள – பௌத்த மயமாக்கப்படுதல், இந்தப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தியே வடக்கு – கிழக்கில் இன்று கரிநாள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.