ஜனாதிபதி முறைமைக்கு முடிவு அரசமைப்பு மேலாதிக்கமே தீர்வு – ஜயம்பதி விக்கிரமரத்ன வலியுறுத்து.
“இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக நீக்கப்பட வேண்டும். நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிள் இருந்து நாடாளுமன்ற ஜனநாயக முறைமையை நோக்கி நகர வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இதன்போது நாடாளுமன்ற மேலாதிக்கம் உருவாவதைத் தவிர்த்து, அரசமைப்பு மேலாதிக்கமே நிறுவப்பட வேண்டும்.”
இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு 2016 – 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்வதாக அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்தது. அந்தச் செயன்முறையைத் தொடர்வதற்கும், அதனை முன்னிறுத்திய கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். இருப்பினும் இந்தச் செயன்முறையில் சகல தரப்பினரும் உள்வாங்கப்பட வேண்டியது மிக அவசியமாகும்.
அதேபோன்று எமது நாட்டில் அரசமைப்பு சகலவற்றிலிருந்தும் மேலோங்கியதாகத் திகழ்கின்றதா என்ற கேள்வி நிலவுகின்றது. ஏனெனில் இங்கு நாடாளுமன்றம், ஆணைக்குழுக்கள், உப குழுக்களின் தீர்மானங்களை சவாலுக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இருப்பினும் அண்மைய காலங்களில் மேற்கூறப்பட்ட கட்டமைப்புக்களால் அரசமைப்புக்கு முற்றிலும் விரோதமான சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
நாம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் இருந்து நாடாளுமன்ற ஜனநாயக முறைமையை நோக்கி நகர வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். ஆனால் இதன்போது நாடாளுமன்ற மேலாதிக்கம் உருவாவதைத் தவிர்த்து, அரசமைப்பு மேலாதிக்கமே நிறுவப்பட வேண்டும்.” – என்றார்.
